'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

எழுத்தால் எழுக

 6.       பைந்தமிழ்ச்செம்மல் இரா.கண்ணன்

 

(சிந்து பாடல்)

எழுத்தால் நம்மினம் எழுக - களம்

                     நுழைக - இடர்

                    களைக - இனி

எதிரிகள் நமைவிட்டு ஒழிக - எங்கும்

எரிமலை போலெழுவாய்

        எந்தமிழின் காவலன் நீ

எத்தனைநாள் பொறுப்பது விழைக             1

 

தமிழன் நீ தலைமையை ஏற்றுப் - புவி

                         மாற்று - ஒளிக்

                           கீற்று - நீ

தன்மானச் சிங்கமெனச் சாற்று – வரும்

தடைகளை உடைத்தெறி!

          தமிழன்நீ வரிப்புலி!

தமிழ்தானே நம்மூச்சுக் காற்று                    2

 

தீந்தமிழ் அழிக்கிற கூட்டம் - கை

                          நீட்டும் - நமை

                            வாட்டும் - அது

தேவையின்றிச் சட்டங்களைத் தீட்டும் - நாமும்

திமிருடன் களம்புகத்

       தீந்தமிழர் ஒற்றுமையில்

தலைதெறிக்க எடுக்குமது ஓட்டம்                3

 

எப்பொழுது வந்ததிந்த இந்தி - இல்லை

                            முந்தி - இதைச்

                             சிந்தி - அது

இப்போது வருகுதிங்கே பந்தி - இங்கு

இதிலென்ன குறையென்னும்

      எந்தமிழை கறைபண்ணும்

எத்தர்கள் ஓலமதை நிந்தி                              4

 

மக்களை ஓரணியில் கூட்டு -  தீ

                        மூட்டு - கொடி

                           நாட்டு - நம்

வரலாற்றைப் பகைவர்க்குக் காட்டு - மேலும்

வருங்கால சந்ததிகள்

    வளமாக வாழ்வதற்கு

மண்ணைவிட்டுப் பகைதன்னை ஓட்டு       5

 

பெயருக்குத் தமிழென்பா ருண்டு - இலை

                            தொண்டு - இதை

                              கண்டு - மனம்

பொங்கியெழ வேண்டும்வெ குண்டு - நாளும்

புயலெனக் களம்நோக்கிப்

     புறப்படு தொன்மைத்தமிழ்ப்

பகைவர்க்கு நீயோர்வெடி குண்டு                6

 

எழுத்தெனும் ஆயுதம் ஏந்தித் - தமிழ்

                             சிந்தி - அவை

                                 முந்தி - நாளும்

இலக்கியத் தமிழ்க்கடல் நீந்தி - வரும்

இடர்களைப் புறந்தள்ளு

      என்றுந்தமிழ் நிலையாக

இருக்கணும்  இதயத்தில்  குந்தி                    7

No comments:

Post a Comment