'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

எழுத்தால் எழுக

 7.       பைந்தமிழ்ச் செம்மல் உமாபாலன் சின்னதுரை

 

நாவலர் வாழ்ந்ததிரு நாட்டின் வழிவந்தேன்

பாவலர் பள்ளியில் பாப்படித்தேன் - ஆவலால்

பாவரங் கேறிவிட்டேன் பைந்தமிழ்த் தாயவளே

பாவர மீவாய் பரிந்து

 

அமையு மிடத்தால் மொழிபெயர் பெறுங்கால்

   அருந்தமிழ் மொழியே யிடப்பெய ரீயும்!

இமையம் வரையி லொன்றிய வீரம்

   இமிழ்கடல் தாண்டிய கடற்படை யாரம்

சமையும் சமயக் கருத்தது போற்றி

   சால்பின் நடுநிலை அல்நிலை சாற்றி

நமையும் புகழுற வைத்தார், தொழுக

   நன்னிலம் நனியுற எழுத்தால் எழுக!        1

 

நகர வாழ்வில் உலகம்; நகர்ந்தே

   நாகரிக மாயோர் நடைபயில் முன்பே

அகர வொழுங்கின் மொழிவளங் கண்டார்

   ஆசியாவின் முதலச் சேறிய வாண்மைச்

சிகரந் தொட்டார் திரைப்படந் தொடங்கச்

   சிறந்திட்டா ரங்கும் எதிலும் முதலெனப்

பகர மகிழ்தல் பான்மை யல்ல

  பார்வியக்கப் புதுமைநாம் படைத்தல் வேண்டும்!  2


அன்பின் வழியில் அற்றைத் தமிழர்

   அருள்நெறி காட்டி அறிகனல் மூட்டி

துன்பின் நிழல்தாம் துளியும் வீழாத்

   துலங்கு வாழ்வைத் துய்க்கத் தந்தார்!

இன்பின் பெருவழி இதயந் தேக்கி

   இறுமாந் திருத்தல் ஓர்தவ மென்னும்

முன்பின் காணா முன்னோர் நெறியின்

   முறையெம் மெழுத்தால் மீண்டும் எழுக!     3

 

எழுத்தைத் தெய்வமென் றேத்தி வாழ்ந்த

   எம்மனோர் மனத்தின் வெளிப்பா டதனை

வழுத்தி நாமும் வரமாய்ப் பெற்றால்

   வையம் அழகாம் வாழ்வுநற் பேறாம்!

பழுத்த சிந்தனை பார்தனில் முன்போற்

   பரவிச் சிறக்கும் பைந்தமிழ் பெருகும்!

எழுத்தால் எழுமவ் வியல்பால் மீண்டும்

   ஏற்றம் பெறுவோம் எழுவோம் இணைவோம்!     4

No comments:

Post a Comment