'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

எழுத்தால் எழுக

14.       கவிஞர் கல்யாணசுந்தரன் காலீசுவரன் (சுரேஜமீ)

 

எழுதும் எழுத்தும் ஒருநாளில்

   எழுந்து நிற்கும் உலகினில்தான்

விழுது தாங்கும் ஆல்போல

   விரியும் மனிதம் பயனுறவும்

தொழுது வருமோ எழுத்தென்ப

   தொடுத்தால் வருமோ சொல்லிடுக

அழுது வருமோ உணர்ச்சிகளால்

   அணைத்தால் வருமோ காதலினால்          1

 

பட்டு வருமோ பாட்டினால்தான்

  பகையில் வருமோ யாரறிவார்?

நட்பில் வருமோ நல்லோர்சொல்

   நயத்தில் வருமோ தெரியாது

கட்டில் சொல்லும் கதையாமோ

  கள்ளில் மயங்கும் சுவையாமோ

தொட்டில் பிள்ளை சுகமாமோ

   தொலைவில் நிற்கும் வானாமோ               2

 

எதுவும் தருமவ் வனுபவமே

   எழுந்து நிற்கும் எழுத்தாகும்

பதுமை போல நின்றிருந்தால்

   பாட்டும் எழுத வாராதே

மதுவும் மங்கை இருப்பிடமும்

   மண்ணில் விதைத்த விதைபோல

எதுவும் எழுத்தாய் ஆகிவிட

   என்னே கண்ண தாசனாநான்?                   3

 

ஆனால் ஒன்றைச் சொல்லிடுவேன்

  அகிலம் சிறக்கும் எழுத்துவரும்

தேனே தென்றல் திரவியமே

  தெவிட்டா இன்பச் செந்தமிழே

ஊனில் கலந்த உயிர்மூச்சே

  உலகம் காணா உவகையெனத்

தானே உலகம் பாராட்டும்

   தகையாய் நீயும் எழுதிடவே!                       4

 

மனிதம் தழைக்க நீயெழுது

  மறந்தும் அறத்தை வழுவாமல்

புனிதம் காத்து நீயெழுது

  புகழுக் காக எழுதாமல்

தனியே ஒருவன் தவித்தாலும்

  தட்டி எழுப்ப நீயெழுது

கனிவாய் முதியோர் மனங்குளிர

  கருத்தை வைத்து நீயெழுது                         5

 

எழுந்து நிற்கும் உனதெழுத்தும்

  ஏழ்மை விரட்டும் உனதெழுத்தும்

அழிவில் லாத உனதெழுத்தும்

   ஆக்கம் பெருக்கும் உனதெழுத்தும்

உழவை மதிக்கும் உனதெழுத்தும்

  ஓங்கி நிற்கும் உனதெழுத்தும்

தொழவே தோன்றும் உனதெழுத்தும்

   தோகை விரிக்கும் குவலயத்தே!                 6

No comments:

Post a Comment