'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

நடுப்பக்க நயம்

 கம்பனைப் போலொரு… பகுதி – 7

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்


அது ஆரியவர்த்தம் பகுதியைச் சார்ந்த சிறுபான்மையினராக வாழ்ந்த, ஆந்திரர் (தெலுங்கர்), கன்னடர், மலையாளர் இவர்களைக் குறித்ததென்க.

ஆரியர்களின் வருகையால் அவர்களுடன் இணங்கி வாழவியலாத திராவிடர்கள் விந்திய மலைச் சாரலையொட்டிப் பரவி வாழலாயினர். அங்கு முன்னரே வாழ்ந்திருந்த தமிழகத்து மக்களுடன் இணைந்து வாழத் தலைபட்டபோது மொழியொப்புமையால் அவ்வளவாகச் சிக்கல் ஏற்படாமல் ஒன்றி வாழ வகையானது.

இந்நிலையே பின்னர் "திராவிட நாடு" என்ற சொல்லால் தென்பகுதியைக் குறிக்கப் பயன்படுவ தாயிற்று. இரவீந்திரநாத் தாகூரின் நாட்டுப் பண்ணிலும் இந்தப் பகுதியே திராவிட நாடு என வழங்கலாயிற்று.

திராவிடர் வாழ்ந்திருந்த, ஆரியர்கள் வந்தேறிய நாடு "ஆரியவர்த்தம்" என்றும், அங்கிருந்து வெளியேறிய, வாழ்விடம்தேடித் தமிழத்துள் பரவிய திராவிடர்கள் வாழ்ந்த பகுதி ஒட்டுமொத்தமாக "திராவிட நாடு" என்றும் ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுவதாயிற்று.

பின்னர் சென்னை மாகாணமாகி, மொழிவழி மாநிலங்களாகப் பிரிகையில் ஆந்திரம், கேரளம், கர்நாடகம் எனப் பிரிந்தவை போக எஞ்சியவை "தமிழ்நாடு" என்றும் ஆனது.

(தமிழ்கூறும் நல்லுலகம் என்று குறிப்பிடும் பனம்பாரனார் 'வடவேங்கடம் தென்குமரி' என்கிறார். வடவேங்கடம் என்பது தமிழ்நாட்டுக்கு வடக்கேயுள்ள திருப்பதியைக் குறிக்கும் என்றுசொல்லத் தேவையில்லை. மேற்கே தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளத்தின் வசமானதுபோல் வடக்கில் திருப்பதி ஆந்திரா வசமானது.)

ஆக... வெளியேறிய இனத்தைச் சேர்ந்த ஒருவர் வந்தேறியாக வாழ்ந்த நிலத்தைச் சொந்தம் கொள்ள முயன்றதே திராவிடம் என்னும் சூழ்ச்சி என்பதை நாம் உணரவேண்டும். திராவிடம் என்ற கருத்தியலால் தமிழினம் என்ற ஒன்றை இல்லாமல் செய்வதே திராவிடத்தின் தலையாய நோக்கம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

நண்பர்களே! இப்போது புரிகிறதா? நாம் தமிழர்கள்... நம்நாடு தமிழ்நாடு, நம்மொழி தமிழ்.

எந்த கால்டுவெல் திராவிடம் என்ற சொல்லைக் கொடுத்தாரோ, அதே கால்டுவெல்,' தமிழ் தனித்துவமானது, திராவிடம் என்பது தமிழைக் குறிக்காது' என்று தெளிவாகக் குறித்தபின்னும்...

தமிழ்நாட்டில் 'இல்லாத திராவிடத்தைச்' சொல்லிப் பிழைப்பு நடத்தியும், தம்மினத்தை வாழ்விக்க நம்மினத்தை, நம் மொழியை, நம் நாட்டை வேரறுக்க திராவிட மாயையைப் பரப்பிய திராவிடத் தலைமையும், அதன் தொண்டர்களும் தமிழுக்கு இரண்டகம் செய்தவாறு 'தமிழர்' என்ற போர்வையிலேயே நம்முடன் பிணைந்திருக்கி றார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

இனரீதியாக இவர்களின் செயல்களைக் கண்டோம். இனி... இலக்கியங்களில் இவர்கள் செய்தவற்றைப் பார்ப்போம்.

வந்தேறிகளாக வந்திணைந்த இவர்கள் பன்னெடுங்காலமாகச் செழித்து வளர்ந்த தமிழ்ப்பண்பாட்டையும், அதன் சிறப்பையும் சிதைக்கும் வழிகளில் இறங்கினர். அதற்கு அடித்தளமாக இவர்கள் தமிழை நன்கு கற்றும், தமிழிலக்கியங்களில் தேர்ச்சிபெற்றும், தமிழறிஞர் என்ற பெயரில் அரசுசார் துறைகளில் தங்களை முன்னிறுத்தியும், பணியிலமர்ந்தும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். எல்லாவற்றுக்கும் இடமளித்த எந்தமிழர் அவர்க்குக் கீழ் பணியாற்றும் நிலைக்கிறங்கினர்.

எனவே, தமிழின் வளர்ச்சியைச் சிதைக்கும் செயலை எவ்விதத் தடையுமில்லாமல் இவர்கள் செய்தனர்.

பெரியாரோ, மிக மோசமாகவே தமிழைப் பற்றிய கருத்தை விதைத்தார்.

பின்வரும் தொகுப்பை ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன்.


1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சனவரி முதல் நாளில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது திருவள்ளுவர், கம்பர் உள்ளிட்ட பத்து தமிழ்ச்சான்றோர்களின் சிலைகள் திறக்கப்பட்டன.

அப்போது பெரியார் ”உலகத்தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம்! இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?” (விடுதலை 15.12.1967) என்று அறிக்கை விட்டார்.

தனது எதிர்ப்பை மேலும் காட்டுவதற்காகப் பெரியாரால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந் நூலின் பெயர் “தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?”. பிறகு அந்த நூலின் தலைப்பு “தமிழும் தமிழரும்” என்று மாற்றப்பட்டது.

தற்போது வரை ஐந்து பதிப்புகள் திராவிடர் கழகம் சார்பில் வெளி வந்துள்ளது. “தமிழ் நீச பாஷை” என்று கூறும் ஆரிய நூல்களுக்கும், “பெரியார் தமிழ் காட்டுமிராண்டி மொழி” என்று எழுதிய இந்த நூலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

அந்த நூலிலிருந்து சில பகுதிகள் பின் வருமாறு:
”தமிழ்மொழியை நான் காட்டுமிராண்டி மொழி என்று 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டு மொழியாகவும் அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்குச் சிறிது இடம் கொடுத்து வந்தேன். ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும் எழுதியும் முயற்சித்தும் வந்து இருக்கிறேன்.

தமிழைத் தமிழ் எழுத்துகளைத் திருத்த வேண்டும் என்று 1927 வாக்கில் கருத்து கொடுத்தேன். வகை சொன்னேன். ஒருவனாவது சிந்திக்கவில்லை. பார்ப்பனர்கள்கூட ஏற்றுக்கொண்டார்கள். நம் காட்டுமிராண்டிகள் சிறிது கூட சிந்திக்கவில்லை.

பிறகு தமிழ்மொழிக்கு கமால் பாட்சா செய்தது போல் ஆங்கில எழுத்துகளை எடுத்துக் கொண்டு காட்டுமிராண்டிக் கால எழுத்துகளைத் தள்ளிவிடு என்றேன்.

இதையும் பார்ப்பனர் சிலர் ஏற்றுக் கொண்டனர். தமிழன் சட்டை செய்யவே இல்லை. இந்நிலையில் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று ஒரு இலட்சத்து ஒன்றாவது தடவையாகச் சொல்லு வதற்கு ஏன் ஆத்திரம் காட்டுகிறாய்?

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன?

தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?

இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் இரண்டு, மூன்று தமிழ்ப்புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் (1)தொல்காப்பியன் (2)திருவள்ளுவர் (3)கம்பர்

இம்மூவரில் 1. தொல்காப்பியன் ஆரியக் கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்து விட்ட மாபெரும் துரோகி.

2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றான்.

3. கம்பன் தமிழ் அறிவைத் தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய்ப் பயன்படுத்தித் தமிழரை இழிவுபடுத்திக் கூலிவாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழர் துரோகியே ஆவான். முழுப் பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன்… உலகில் ஒரு மாபெரும் மானம் கெட்ட சமுதாயம் இருக்கிறது என்றால் அது கம்பனுக்குச் சிலை வைக்க வேண்டும் என்று கூறும் கூட்டமேயாகும்.”

பெரியாரின் இந்த நூல் பார்ப்பன எதிர்ப்பு வேடங்கட்டித் தமிழ்மொழி மீதும், தமிழ்ப் புலவர்கள் மீதும் தமிழுக்கு உழைத்த நம் முப்பாட்டன்களின் மீதும் கடும் நஞ்சைக் கக்குகிறது.

இந்தி எதிர்ப்புப்போரில் தமிழுக்குச் சிறிது இடம் கொடுத்ததன்மூலம் தமிழ்ப்பற்றால் இந்தியை எதிர்க்கவில்லை என்றும் ஒப்புக் கொள்கிறார்.
தமிழ் எழுத்துகளைக் கைவிட்டு ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தச் சொல்வதன் மூலம் தமிழின் அடையாள வேர் அழியட்டும் என்னும் விருப்பத்தை மறைமுகமாகச் சொல்கிறார்.

ஆரியத்தை எதிர்த்த திருவள்ளுவன் ஆரியக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தவனாம். அதுவும் மத உணர்ச்சியோடு கூறியவனாம். 1948இல் திருவள்ளுவர் மாநாட்டில் பங்கேற்ற பெரியார் “திருக்குறள் ஆரிய தர்மத்தை மனுதர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல்” என்று பேசினார்.

1948இல் பேசியது சரியா? 1968 இல் பேசியது சரியா? முரண்பாட்டின் தொகுப்பு மூட்டை பெரியார் என்பதற்குத் திருக்குறள் ஒன்றே போதும்.

தமிழையும், தமிழ்ப்புலவர்களையும் இழித்துப் பேசும் பெரியார் 1924இல் திருவண்ணாமலை காங்கிரசு மாநாட்டில் தமிழ் குறித்து பேசியுள்ளார். சாமி சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ நூலில் இது உள்ளது.

“ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றே யாகும். மொழிப்பற்றிராதாரிடத்து தேசப்பற்றிரா தென்பது நிச்சயம். வங்காளிக்கு வங்க மொழியில் பற்றுண்டு, ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு. ஆனால் தமிழனுக்கு தமிழில் பற்றில்லை இது பொய்யோ? தாய்மொழியில் பற்று செலுத்தாதிருக்கும்வரை தமிழர்கள் முன்னேற்ற மடைய மாட்டார்கள்.”

1924இல் தமிழர்களுக்கு மொழிப்பற்று வேண்டும் என்றார். 1968இல் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதால் முன்னேறுவதற்கு வழி இல்லை என்றும் மாற்றிப் பேசுகிறார். இது தான் பெரியாரின் முரண்பட்ட மொழிக் கொள்கை.

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டமென்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? என்று கேட்கும் பெரியாருக்கு தமிழர்கள் திருப்பிக் கேட்போம்.

கர்நாடாகவிற்கு சென்று கன்னடத்தை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? என்று பேசிவிட்டு வீடு திரும்பியிருக்க முடியுமா? ஆந்திரத்திற்கு சென்று தெலுங்கிலிருக்கும் பெருமை என்ன? என்று கேட்டு விடும் துணிச்சல் இவருக்கு இருந்தது உண்டா? தமிழ்மொழியிலேயே பகுத்தறிவு பரப்புரை செய்துவிட்டுப் பிறகு தமிழையே திட்டுவது என்பது பெரியார் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்திட்ட கொடிய செயலாகும். தமிழ்மீதும் தமிழர்மீதும் அவருக்கிருக்கும் வன்மத்தை இந்நூல் நன்றாகவே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!
(நன்றி. தமிழ் தேசியன் இணையதளம்.)

இவை மட்டுமா...? இன்னும் உள்ளன...     (தொடரும்…)

No comments:

Post a Comment