11.பைந்தமிழ்ப் பாமணி இரா. அழகர்சாமி
எழுகநீ எழுத்தால் என்றே
எழுப்பிடும் வரதர் தம்மைத்
தொழுதுநான் தொடங்கு கின்றேன்
துடிப்புடன் மன்றம் வந்தே!
விழியெனத் தமிழை என்றும்
விருப்புடன் பயிலும் சோலைக்
குழுவுக்கு முதல்வ ணக்கம்
குறைவின்றி வாழ்க வாழ்க! 1
ஊர்நலம் காக்கும் நல்லோர்
உரைக்கின்ற சொற்கள் எல்லாம்
கார்முகில் பாலை வீழ்ந்த
கனமழை போலே யானால்
ஊர்தனை யடித்தே தம்மின்
உலையிடும் மாந்தர் ஊடே
யார்வந்து காப்பார் இந்த
ஏதிலா மக்கள் தம்மை! 2
வாயிலே கோட்டை கட்டி
வந்தவர் ஆளும் போது
நோயிலே வீழும் நாடு
நொந்துதான் போவார் மக்கள்
தூயநல் லாட்சி யின்றித்
துயரமே தொடரு மாயின்
நாயினும் கீழாய் அன்னார்
நலமிழந் தழிவார் உண்மை! 3
தன்னலம் கருதும் பேர்கள்
தரணியை ஆள்வா ராயின்
எந்நலம் விளையும் இங்கே
எந்நிலை ஆகும் நாடு
முன்னொரு காலம் நாட்டை
முனைப்புடன் ஆண்ட மன்னர்
தன்னரு கமர்த்திக் கொண்டார்
தமிழாய்ந்த நல்லோர் தம்மை 4
அன்னவர் அரச ருக்கே
அறிவார்ந்த வழிகள் சொல்லிப்
பொன்னெனப் புவியை ஆளப்
பொறுப்புகள் வகுப்பார்
இன்றோ
கண்ணிலா மாந்தர் போலே
கல்வியைத் தொலைத்து விட்டு
மண்ணிலே மண்டை செய்த
மாந்தர்கள் ஆள்கின் றாரே! 5
கற்றவர் ஆள வேண்டும்
கல்வியை உயர்த்த வேண்டும்
மற்றவர் விலக வேண்டும்
மாற்றங்கள் நிகழ வேண்டும்
கொற்றவன் ஒழுக்கத் தாலே
குடிகளும் மகிழும்! தீமை
அற்றதோர் நாடு காண
அறிவுள மன்னன் வேண்டும்! 6
எழுதுமுன் கோலில், பற்றும்
எரிதழல் நிரப்பு! நித்தம்
அழுதது போதும், உன்றன்
அறிவினை எழுப்பு! வீணே
தொழுதது போதும், உள்ளத்
துணிவினை உசுப்பு! மீண்டும்
பொழுதுகள் உனக்காய்த் தானே
புவியிலே புலர வேண்டும்! 7
பேனா முனைதான் மண்ணில்
புரட்சிகள் செய்யும்! நாடு
கோணா நிலையிற் செல்லக்
கோடுகள் வரையும்! யாரும்
நாணா நிலையில் வாழ
நன்மைகள் புரியும்! துன்பம்
காணா நிலையில் நாட்டைக்
களிப்புடன் நடத்திச் செல்லும்! 8
கேடுகள் களையும்! கெட்ட
கீழ்மைகள் ஒழிக்கும்! செல்லும்
நாடுகள் எங்கும் நித்தம்
நன்மைகள் விளைக்கும்! நாட்டில்
மேடுகள் பள்ளம் நீக்கி
மேன்மைகள் கூட்டும்! இந்தப்
பாடுகள் யாவும் செய்யும்
பழுதிலா எழுத்துத் தானே! 9
அழியுமா மொழியென் றெண்ணும்
அற்பர்கள் கையில் சிக்கும்
இழிநிலை களைவோம்! அஃதை
எழுத்தினால் வெல்வோம்!
தீராப்
பழியினை அழிப்போம்! நல்ல
பாதைகள் சமைப்போம்! பேசும்
மொழியிலே ஆள்வ தற்கே
முழங்குவோம் எழுத்தி னாலே! 10
No comments:
Post a Comment