'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

எழுத்தால் எழுக

 9.       பைந்தமிழ்ப்பாமணி கவிஞர் ஜெனிஅசோக்

 

அழிந்தும் அழியொணா தொன்றாம் எழுத்தினா

    லழிந்தும் வாழ்ந்திருப்போம்

அழிந்து மறியொணா மாந்தர் படிக்கவே

    யனைத்து மெழுதிவைப்போம்

விழுந்தோர் மீண்டெழு வாய்ப்பை யெழுதியே

    மீளும் வழிகொடுப்போம்

தழும்பை யனுபவ மாக்கும் வலுவினைத்

    தரவே யெழுதுவமே                                     1

 

மருட்டும் வார்த்தைகள் மறந்து போகுமே

    வடிவம் கொடுப்போமே

கருக்குப் பட்டயம் எழுத்தே அதனைக்

    கண்ணாய் மதிப்போமே

அருவம் வாய்மொழி யெழுத்தே முகவரி

     அதற்காய் வாழ்வோமே

இருளும் நிலையல பொருளும் நிலையல

      எழுத்தா லிணைவோமே                           2

 

பகையைக் கடந்துநல் நட்பை யடைந்துநாம்

    பண்பாட் டினைக்காப்போம்

புகையை யெழுப்புவோர் களைத்துப் போம்வரை

   பூத்து மணங்கொடுப்போம்

நகைக்கும் நரிகளின் சாயம் கலைக்கவே

    நன்றாய் மொழியறிவோம்

திகைக்குஞ் சேதிகள் மொழியைச் சிதைக்கையில்

    திறப்பில் நிற்போமே                                   3

 

ஓல மடங்கினுஞ் சான்றா மெழுத்தினா

    லுண்மை வாழ்வுறுமே

பாலம் போலநாம் கூடி யெழுதுவோம்

    பாக்கள் வழிதருமே

காலங் கடப்பினும் வாழும் மரபினால்

    காவல் கொடுப்போமே

ஞாலம் நோயினால் வாடிக் கிடப்பினு

    மெழுத்தால் எழுவோமே                             4

No comments:

Post a Comment