4. பைந்தமிழ்ச் செம்மல் சாமி சுரேஷ்
நீர்வளமும் நெல்வளமும் நிறைந்த நாடாம்
    நீங்காத புகழ்வெளிச்சம்
படைத்த நாடாம்
தேர்வளமும் திறல்வளமும் மிகுந்த நாடாம்
    தேவைக்கு மேல்பொருளை அடைந்த
நாடாம்
ஊர்வளத்தைப் பிறநாட்டார் காணும் முன்னே
    உலகமெலாம் கடல்வளத்தை வளைத்த
நாடாம்
கார்வளமும் நாணுகின்ற இலக்கி யங்கள்
    கடலளவு கொண்டதெங்கள் தமிழர்
நாடாம்        1
தமிழர்க்குத் தமிழன்றி முகமே இல்லை
    தனித்தனியாய் அவர்களுக்குள்
பேத மில்லை
அமிழ்தான மொழிவளத்தைப் பேணு தற்காய்
    அவன்போல உயிரீந்தார் யாரு
மில்லை
சிமிழ்க்கின்ற நேரத்தில் உயிரை வாங்கும்
    சிறுமதியார் வளைக்கின்றார்;
கால மில்லை
கமழ்கின்ற தமிழோடு காரஞ் சேர்த்துக்
    கடுகிவினை புரிவார்க்குத் தோல்வி இல்லை       2
'நீட்'டென்ற கொடுங்கரத்தை நீட்டி விட்டார்
    நிதம்நமது பிள்ளைகளை இழந்து
நின்றோம்
'வாட்'வரியும் பிறவரியும் வழித்தெ டுத்தார்
    வாணிபத்தைப் பிறரிடத்தில்
இழந்து நின்றோம்
மாட்டனைய மூளைகொண்ட மடையன் தந்த
    மறுமலர்ச்சிக் குலக்கல்வி
ஏற்றுக் கொண்டால்
தேட்டமுடன் செப்புகின்றேன் முன்னோர் செய்த
    தெருவோர வேலையில்தாம் தேங்கி நிற்போம்  3
      
படித்ததமிழ் இளையோர்கள் கோடி பேர்கள்
    பணிவேண்டிப் பதிந்துவிட்டுக்
காத்தி ருக்கக்
குடிப்பதற்கே முன்னுரிமை வழங்கு கின்றார்
    குடிகெடுக்கும் செயல்முனைந்து
செதுக்கு கின்றார்
நடிக்கவரும் தொழிலோரும் நடுங்கும் வண்ணம்
    நாச்சுழற்றிப் பலகாலம்  ஆளு கின்றார்
அடித்தவடி மேற்காயம் ஆறும் முன்னே
    அடிநாக்கில் தேள்வைத்துக்
கொட்டு கின்றார்    4
தெருவோரம் திரிகின்ற நாய்கள் கூடத்
    தெளிவான இடப்பற்றைக் கொண்டி
ருக்கும்
வருவோர்கள் போவோர்கள் எல்லாம் வாழ
    வக்கற்று நிற்குதடா தமிழக்
கூட்டம்
கருவோடு திருவான தமிழர் நாமும்
    களமாடப் போமுன்னர் கருத்தை
எல்லாம்
செருவோடே எழுத்துலகில் செதுக்கி வைப்போம்
    தெருளற்ற பயணத்தைத் தொடங்கி
வைப்போம்
              5
முன்போல இன்றில்லை முகநூல் போல
    முழுநேரம் பயன்பாட்டுத்
தளங்கள் உண்டு
கண்போல எண்ணெழுத்தாம் கவனம் கொண்டு
    கருத்துகளைத் தரவோடு சேர்த்து
வைத்துப்
பொன்போல எதிர்காலப் பிள்ளைக் கையில்
    பொறுப்புடனே தந்துவிட்டு
நகர்ந்து செல்வோம்
என்போல நீங்களில்லை எல்லாம் வல்ல
   எழுத்தாலே எழுந்தவர்தாம்
அறிவேன் நானே       6
No comments:
Post a Comment