'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

உத்தம குரு – பகுதி 4


பைந்தமிழ்ச் செம்மல் விவேக்பாரதி

கவிமண்டபப் படலம்

சீர்வளரும் இத்தகைய சிறப்பைப் பெற்ற
   செந்தமிழ்க்கோ நாட்டினிலே தூதன் ஓர்நாள்
போர்நிகழும் அறிகுறியைச் சொல்வ தன்ன
   பொங்கிவழி கின்றபெரும் வியர்வை யோடு
தேர்ப்புரவி மிசையோடி அவைக்கு வந்தான்
   தென்னவனே நீர்வாழ்க வாழ்க ஆட்சி
ஊர்வாழ்க நம்நாடும் உயர்க! ஐய
   ஓர்செய்தி கொண்டுவந்தேன் அனும திப்பீர்!

எனப்பதறி தடுமாற்றம் நிறைய வெய்தி
   இளைப்போடு மன்பதிலை நோக்கி நின்றான்!
மனத்தமைதி மிகக்கொண்ட மன்னன், செய்தி
   வழங்கிடுக! நீமுதலில் பற்றம் தீர்கென்
றனுமதிக்க போரூழிப் புறப்பா டன்ன
   புதுமைதிகழ் நமதுநகர் நோக்கி அந்த
மனிதவுரு கொண்டவிலங் கேகு தைய
   மாற்றார்நாட் டொற்றனிவை பகர்ந்தான் என்றான்!

சீரேந்து மன்னனுக்கும் மற்றும் புத்திச்
   சிறப்புடைய அமைச்சர்மார் யாவ ருக்கும்
யாரந்த மனிதவுரு கொள்வி லங்கு
   யாதவன்றன் செய்கைகள் எதற்கிவ் வச்சம்?
ஊரெந்த ஊரென்றும் அவன்யா ரென்றும்
   உளத்திலெழும் ஐயங்கள் கண்ணில் தோன்ற
காருந்து மின்னலெனப் பாடும் மக்காள்
   கதையிதனைக் கேட்டவனை அறிவீ ரென்றான்!

நம்மூர்க்குச் சிலகாதம் தொலைவில் உள்ள
   நல்லரசங் கோட்டையிலே ஆண்டு முன்னம் 
தம்மூரின் புலவர்கு ழாத்தைக் கூட்டித்
   தனிவேந்தன் இவைசொன்னான்! புலமை சான்ற
செம்மொழியின் புலவோரே நமத வைக்குள்
   செருக்குடைய வொருபுலவன் தோன்றி யுள்ளான்
எம்மொழிக்கும் நிகராகா தவனின் பாட்டென்
   றெக்காள மிடுகின்றான் உணர்க வென்றான்!

ஆங்குடனே கலித்துறைசெய் புலவன் சொன்னான்
   அரசேநீர் கவலற்க எனதந் தாதி
ஓங்குகையில் அவன்கொற்றம் அடங்கும் என்றான்
   ஒழிப்போமென் றேவெண்பாப் புலவன் சொன்னான்!
நாங்களொரு பாட்டெடுத்து விருத்தம் பாட
   நாடானோ தாய்மடியை அழுதற் கென்று
தூங்கலிசை வஞ்சிப்பா புலவன் சொன்னான்
   தோள்நிமிர்த்தி அவ்வரசன் அவைபு குந்தான்!

அரசனுக்கு நிகரான இருக்கை கொண்டு
   ஆங்கந்த புலவனவன் வீற்றி ருந்தான்
முரசறையப் பக்கத்தில் ஒருவன், இன்னும்
   முதுகுக்குப் பின்னாலோ தம்பு ராவில்
சுருதிசெய இன்னொருவன் இடது பக்கம்
   சுகயாழை மீட்டுபவன் இவர்க ளோடு
கருதியொரு முடிவோடு வீற்றி ருந்தான்
   கவிஞரவை தொடங்கிற்று மன்னன் சொன்னான்

பலநாட்டை உம்பாட்டால் வென்றீர் என்றும்
   பாட்டுசுவை வானவர்க்கு விருப்பம் என்றும்
உலகத்தை நிறுத்தவல்ல சொல்லீர் என்றும்
   ஊரார்கள் புகழ்வதையாம் கேட்டுள் ளோமே
அலகில்புகழ் உடையதமை அவையில் பாட
   அழைப்புதர லாமென்றே ஆலோ சித்தோம்
சிலதினத்தில் நீர்நேரே விஜயம் செய்தீர்
   சிந்துகிறோம் எம்வணக்கம் முதலில் நாங்கள்!

போர்செய்து பேர்பெற்ற மன்ன ருண்டு
   பொன்னாலே புகழ்பெற்ற மன்ன ருண்டு
நேர்செய்த பக்தியினால் நிறைமை எய்தி
   நெடுங்காலம் புகழ்பெற்ற மன்ன ருண்டு
ஏர்செய்து பேர்பெற்ற அரசும் உண்டு
   எம்பக்க அரசெல்லாம் சுவைகொள் பாட்டுச்
சீர்செய்து பேர்பெற்ற தறிவீர்! இந்தச்
   சிறந்தவவை எய்தியதென் உரைப்பீ ரென்றான்!

யான்பெற்ற செல்வமெலாம் தமிழுக் காக
   யாழ்செய்யும் இசைக்காக கலைகட் காக
வான்பெற்ற நீரள்ளி வழங்கல் போலே
   வாரியிரைத் தெம்முடைய கவிதா மன்றம்
தேன்பெற்ற பூக்கள்போற் றெளிந்த பாக்கள்
   தெறிக்கின்ற வகைசெய்து வைத்தோம்! இங்கே
ஏன்பெற்ற செல்வமெலாம் போதா தென்னும்
   ஏக்கத்தால் வந்தீரோ தருவோம்! பாடும்!

சோவென்று தொடங்கியதும் சொற்கள் கூட்டிச்
   சொல்லென்று முடியும்முன் இசையில் அஃதை
ஆவென்னும் ஆகாரம் தேற்றப் பாடி
   அலங்காரம் செய்கின்ற புலவோர் மன்றில்
பாவொன்று கற்றிடலாம் என்னும் ஆசைப்
   பாய்ந்திடவே வந்தீரோ பயிற்று விப்போம்
காவென்ற தன்முன்னம் பாடும்! உங்கள்
   கானத்தின் திறன்கேட்போம் வாய்தி றங்கள்!

பக்கத்தில் இசைசேர்க்கும் கூட்டம்! ஓஹோ
   படையாக வந்தால்தான் சிறப்பென் றெங்கோ
துக்கத்தில் திகழ்ந்திருந்த ஏழை யேரைத்
   தோற்றுவித்து வந்தீரோ! சொல்லும்! என்றான்!
வெட்கத்தில் தலைகுணிந்தார் வாத்தி யத்தார்
   வெஞ்சினம்கொண் டானந்தப் புலவன், சாய்ந்து
பக்கத்தில் இருந்தவரைத் தேற்றித் தன்றன்
   பாடுகுர லாலிதனைப் பகர லானான்!

ஈரேழு பதினான் குலகத்தையும் ஒற்றை
   இசையில் தகர்க்க வல்லேன் - அந்த
இந்திரனை என்னுடைய கற்பனையின் சக்தியால்
   இங்கே நிறுத்த வல்லேன்
கூரான ஈட்டிகள் குத்தாமல் சொல்கொண்டு
   கூரை படைக்க வல்லேன் - தீய
கூற்றையும் என்னுடைய கூற்றினால் சாய்க்கின்ற
   கொழுந்துக் கவிதை சொல்வேன்
பாராளும் வேந்தனுக் கித்தனை கருவமா
   பாடம் புகட்டு கின்றேன் - அவன்
பாட்டெழுது கூட்டமும் சேர்ந்தெழும் ஆட்டமும்
   பறவைக ளாகிப் போக!
சீராரும் செந்தமிழில் மந்திரச் சொல்கூட்டிச்
   சித்தி படைக்க வல்ல - செல்வச்
சித்தமுத் தன்சொல்லின் சத்தியம் வெல்கென்று
   சிந்துகருள் காளி ஓம்!ஓம்!

என்றவன் பாடிட எழுந்த கூட்டமும்
அன்றிருந் தாடிய அரசன் கொற்றமும்
தென்றலில் மெல்லிய சிறக சைத்திடும்
அன்றிலும் நாரையும் ஆகிக் கூவின!

மந்திரச் சொல்லுடன் வகுத்த பாடலின்
சுந்தரம் ஓர்புரம் சுருக்கு போல்விழு
தந்திர சாபமும் தடையும் ஓர்புரம்
வந்தவர் யாவரும் வழிம றந்தனர்

சித்தமுத் தன்கவி சிறிது சிந்தினான்
வித்தையில் கர்வமும் விளங்கி நின்றவர்
அத்தனை பேர்களும் அலகில் மண் தரை
கொத்திடும் புட்களின் கோலம் பூண்டனர்

பாவலர் கூறிய பகட்டில் ஆடிய
காவலன் பேச்சினில் கனன்ற பேச்சினன்
நாவல மந்திர நலத்துப் பாடலைத்
தூவினன் மானுடர் சிறகு கொள்ளவே

பின்னவர் கூவிய பிதற்றல் கேட்டவன்
மன்னவர் தம்மொடு மதியின் புலவரை
அன்னவர் முன்னிலை அமைந்த வண்ணமே
சொன்னலப் பாடலைச் சொல்லி மீட்டனன்!

நல்லவன் என்றுளார் நினைக்க வன்னவன்
சொல்வளர் பாவலர் சூழி டத்தினில்
வல்வலி கொண்டுயான் வென்று ளேனெனச்
சொல்லிய வர்களின் தலைக விழ்த்தனன்!

நுங்களின் கோலது நுழையும் ஓலையும்
மங்கலப் பாசெயும் வளமும் என்னிடம்
சங்கையி லாதுச மர்ப்ப ணஞ்சொலித்
தங்கியென் தாள்களில் தலைகள் தாழ்த்துக

இன்றுமு தல்கவி இயம்பி டோமென
நின்றொரு சத்தியம் நிறைந்த மக்களூர்
மன்றிடை வைத்துநின் மதிப்பு தீர்ந்தொரு
குன்றிடை சேர்கெனக் குறையி லேசினான்

தீயவன் அன்றுபோல் திசையெ லாம்நிறை
தூயவர் நாட்டிடை சொல்லின் வன்மையால்
போயவர் முன்னிசை பொழிதல் உற்றனன்
ஆயிரம் பாவலர் அடிப ணிந்தனர்!!

-தொடரும்

1 comment:

  1. கொண்டு ஆங்கந்த/
    உண்டு எம்பக்கம்
    புணர்ச்சியில் சீர் மாறும்

    ReplyDelete