'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

புலம்பெயர் நாடும் வாழ்வும் – பகுதி 5


பைந்தமிழ்ச் செம்மல் இணுவையூர் வ.க. பரமநாதன்

டென்மார்க்கிலிருந்து...

சென்ற தொடரின் தொடராகச் சில தகவல்களை, உண்மையாக நடந்ததை  எழுத முனைகிறேன்.

இங்குள்ள பாடசாலைகள், 8 ஆம் மற்றும் 9 ஆம் வகுப்புப் பிள்ளைகளின் பெற்றோர் அனைவரையும் அழைத்துப் பிள்ளைகளின் செயற்பாடுகளுள் தேவையற்ற பிரச்சனைகள் எவ்வாறு உள்நுழைகின்றன என்பதனையும் அதனால் பிள்ளைகள் தவறான வழிக்குச் செல்லும் ஆபத்து உண்டு போன்ற தகவல்களையும் அதற்குரிய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மூலமாக விளக்கி, சட்டதிட்டங்களுக்குள் எவ்வாறு பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டு என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நான் இப்படியான ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அங்கு அறிந்தவற்றினை  இங்கு உங்களுக்கு அறியத்தருகின்றேன்.

நகர்ப்புறத்திற்குச் சற்று உள்ளேயுள்ள வீடொன்றில் வசித்துவரும் சிறுமி தன் வகுப்புப் பிள்ளைகள் ஆண், பெண் இருபாலாரும் கலந்து கொள்ளும் ஒர் இரவு நிகழ்வினை ஒழுங்கு செய்துள்ளார். அனைவரும் 15 அகவைக்கும் 18 அகவைக்கும் உட்பட்டவர்கள். மாலை 4 மணியளவில் அவ்வீட்டில் எல்லோரும் சந்திப்பதாகவும், சிறுமியின் பெற்றோர் அன்றிரவு வீட்டில் இருக்க மாட்டார்கள் என்றும், ஆகையினால் அனைவரும் இரவுக் கொண்டாட்டத்தின் பின் அங்கேயே உறங்குவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

பெற்றோர் வீட்டினை விட்டு நீங்கியதும் வகுப்பு மாணவர்கள் வரத்தொடங்குகிறார்கள். மதுபானம் அருந்தலுடன் நிகழ்வு ஆரம்பமாகின்றது. நேரம் செல்லச் செல்ல, பல வேறு இளைஞர்கள் (ஆண்,பெண்) வரத் தொடங்குகிறார்கள். வீட்டிற்குள் ஆட்டம் பாட்டம் என்று ஒரே மகிழ்ச்சிக் கூத்து. ஆண் பெண் என்பதனால் காதலர்களாகவும் சிலர் அங்கே இருந்திருக்கிறார்கள். அனைவரினதும் பலமான சத்தமும், பலர் புகைபிடித்ததனால் ஒரே புகை மூட்டமாகவும் வீடு மாறத் தொடங்குகின்றது. காதலர்களாகவுள்ளவர்கள் வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அவ்வீட்டிற்குரிய சிறுமிக்குப் பீதி ஏற்படுகிறது. எதற்காகக் கூடினார்களோ அது திசைமாறிச் செல்வதனையும், யாரையும் வெளியேற்ற முடியாத சூழலுண்டானதையும் உணர்ந்த அச்சிறுமி பயத்தோடு வீட்டிற்கு வெளியே வருகின்றாள். தன் பெற்றோருக்கு அழைப்பினை ஏற்படுத்தி உதவி கேட்க முனைகிறாள். பெற்றோரின் தொலை பேசி இயங்கவில்லை. சிறுமிக்கு இன்னும் பயம் அதிகமாகின்றது.  அவள் அழுகிறாள், உதவிக்கு யாரை அழைப்பது என்று யோசித்த போது நகர பாதுகாவலரை (Police) அழைப்பதே சிறப்பு எனவுணர்ந்து, தொலைபேசியழைப்பில் அவர்களை வரவழைக்கிறாள்.

நகர பாதுகாவலர்கள் உள்ளே புகுந்து எவரெவர் அழைப்பின்றி வந்தார்களோ அவர்களை வெளியே அனுப்பியதுடன் அச்சிறுமிக்கு ஆறுதலளித்து அவ்வீட்டிற்கு காவலாகவும் இருந்துள்ளார்கள்.

இத்தகவலை எம்மோடு பகிர்ந்து கொண்டவர், பிள்ளைகளை இது போன்ற நிகழ்வுகளில் தனியே விட்டுச் செல்வதாயினும், அடிக்கடி பிள்ளையுடன் தொடர்பு கொண்டு அங்கு நடப்பதனை அறியவேண்டும், அல்லது வீட்டில் அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று எம்மை அறிவுறுத்தினார்.

மேலும் சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் இரவு நேரங்களில் இரவுக் களியாட்டம் நடைபெறுமிடங்கள் உட்பட, 18 அகவைக்குட்பட்டவர்கள் நடமாடும் பகுதிகளில் அவர்களுக்குத் தெரியாமலே அவர்களைக் கண்காணித்தபடி இருப்பார்கள். இவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படுமிடத்து அவர்களுக்கு வேண்டிய உதவியினைச் செய்து கொடுப்பார்கள். எடுத்துக்காட்டாக ஒரு பிள்ளை (ஆண்,பெண்) அளவுக்கு அதிகமாக மது அருந்தி ஒவ்வாமை (vomiting) ஏற்பட்டு வீதியில் காணப்படுமிடத்து அப்பிள்ளைக்கு வேண்டிய உடனடித் தேவையினைச் செய்து கொடுப்பதோடு பிள்ளையின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்து, அவர்களை அழைத்துப் பிள்ளையினை ஒப்படைப்பார்கள். பெற்றோரினைத் தொடர்பு கொள்ள முடியாது போயின் நகர பாதுகாவல் நிலையத்திற்குத் (Police station) தகவலினைக் கொடுத்து,  தம்முடனே அப்பிள்ளையினை அழைத்துச்சென்று பாதுகாப்பளிப்பார்கள்.

18 அகவைக்குட்பட்ட பிள்ளைகளுக்குப் பெற்றோரினால் துன்புறுத்தல் ஏற்படுத்தப் படுமானால் அவர்களைப் பெற்றோரிடமிருந்து பிரித்து, அரசால் தேர்ந்தெடுக்கப்படும் வேறு குடும்பத்துடன் இணைத்து வளர்க்கப்படுவதற்கான சட்டவாக்கமும் உண்டு.  18 அகவைக்குப் பின் தாம்விரும்பும் விதத்தில் வாழ்வதற்கான அனைத்துச் சுதந்திரமும் ஒவ்வொருவருக்கும் உண்டு.

நான் டென்மார்க் நாட்டு நடமுறையினைப் பார்த்து பல இடங்களில் பிரமித்துப் போயுள்ளேன்.

தொடரும்….

No comments:

Post a Comment