'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

ஆசிரியர் பக்கம்


அன்பானவர்களே வணக்கம்!

பைந்தமிழ்ச்சோலையின் நான்காமாண்டு விழா மிகமிகச் சீரும் சிறப்புமாக நேற்று நிகழ்ந்து முடிந்தது.

கட்டுக்கோப்பான நிகழ்ச்சியமைப்பும், அந்தக் கட்டுப்பாடுகளைப் பொன்னேபோல் போற்றிய சோலைக் குயில்களின் ஒத்துழைப்பும், தமிழ்த் தாயின் அருளும் ஒருங்கேயமைந்ததால் இந்த வெற்றியை நாம் நிகழ்த்த முடிந்தது. 100 விழுக்காடு மனநிறைவு எனக்கு. உங்களுக்கும் நிறைவாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த ஆண்டின் புதுமையாக முழு நிகழ்வையும் காணொலியாக யூடியூபில் நேரலையாகப் பார்க்கும் வசதியைச் செய்திருந்தோம். அரங்கத்தின் சால்பிலேயே அதைச் செய்து தந்தார்கள். அயல்நாட்டில் வாழும் சோலைச் சொந்தங்களும், நிகழ்வில் பங்கேற்க இயலாத வர்களும் கண்டுகளித்தனர் என்பதில் மகிழ்ச்சியே.

எம் சோலை அன்பர்களுக்கு நன்றி கூறுவது நம்மை நாமே பிரித்துக்கொள்வதைப் போன்றது தான் ஆயினும் "நன்றி மறப்பது நன்றன்று" என ஐயன் கூற்றுக்கேற்ப மரபின்படி நன்றி கூறுவதே சிறப்பாகும். சோலை விழா என்று அறிவித்தவுடன் தொடங்கி, எனக்குப் பக்கத் துணையாக நின்று பல பணிகளைத் தானே சுமந்து, இவ்விழா அரங்கம் உட்பட இன்னும்… இன்னும்... என் இலக்கிய வாரிசு விவேக்பாரதிக்கு என் ஆசிகலந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

பன்மணியந்தாதி என்றதோர் வழக்கிலில்லாத புதிய சிற்றிலக்கியத்தைத் தொகுத்தளிக்கத் தலைமையேற்ற என் பாசத்திற்குரிய மன்னையார்க்கு நன்றி என்ற ஒற்றைச்சொல்லால் கூறினால் அதில் நிறைவேற்படாது. என் மனங் கலந்த நன்றியைக் கூறி மகிழ்கிறேன்.

ஒருவிழாவின் வெற்றிக்கு முதன்மையான பொருளாதாரச் சூழலே காரணமாகிறது. அவ்வகையில், இவ்விழாவைத் தங்கள் குடும்பவிழாவாகக் கொண்டு அதற்காகத் தங்களாலியன்ற நிதியளித்துதவிய சோலைவாழ் குடும்ப உறவுகளுக்குத் தலைமேலேந்திய கைகளால் நன்றி மலர்களைக் காணிக்கை யாக்குகிறேன். விழா அரங்கில் நேரத்திற்கு முன்பே வந்திருந்து உதவிய நடராசன் ஐயா, சிதம்பரம் மோகன் ஐயா, சுந்தரராசன், விஜய், ஜோதிபாஸ், வள்ளிமுத்து, அர.விவேகானந்தன் சியாமளாம்மா உள்ளிட்ட மற்றவர்கட்கும் என் நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

தலைமையேற்று நடத்திய அமர்வு தலைவர்கட்கும், இயலாச் சூழலிலும் வந்திருந்து சிறப்புரையாற்றிய கவிக்கோ ஞானச்செல்வன் ஐயாவுக்கும், இசைக்கவியார்க்கும், கருமலைத் தமிழாழன் ஐயாவுக்கும், விருதுகளை யேற்று மகிழ்வித்த ரவி ஐயாவுக்கும், இளவல் தமிழகழ்வனுக்கும் உள்ளார்ந்த உவகையைத் தெரிவித்து மகிழ்கிறேன். பார்வையாளராகவும், பங்கேற் பாளராகவும் வந்திருந்து நிகழ்வைச் சிறப்பித்த அனைத்துக் கவிஞர் பெருமக்களுக்கும் நன்றி. . நன்றி... நன்றி…!

நிகழ்வின் செய்தியை வெளியிட்டுதவிய தினத்தந்தி, தினமலர், தினமணி, தி ஹிந்து ஆகிய நாளிதழ்கட்கும், அமுதசுரபி சிற்றிதழ்க்கும் என் உள்ளார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன். விழாவில் நினைவாக அனைவருக்கும் மரக் கன்றுகளைத் தன் மகளின் திருக்கையால் கொடுத்த பசுமை நாயகன் விஜயகுமார் வேல்முருகனுக்கும் நன்றி…நன்றி... இன்னும் யாருடைய பெயராவது விடுபட்டிருப்பின் அவர்களுக்கும் இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

வாழிய சோலை! வளர்க நற்றமிழ்!

இன்ப நிறைவுடன்…
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

No comments:

Post a Comment