வெண்பா
1.       கவிஞர் பொன். இனியன்
பூநக்கிக் காறுகால்; போக்கிரிக்கோ மாறுகால்;
வானோக்குங் காலைந்து மாம்பூதம்; ஒல்லான்
செயலுக் குதவாதார்க் கேனிருகால்; மூடன்
முயலுக்குக் காலெண்ணின் மூன்று    
2.       கவிஞர் F. Hamdun
தன்குறைக்கு வாதிட்டும் தாங்கா மனத்துடன்
வன்மத்தால் மற்றவரை வாரிடுவார் - இன்னும்
வயமிழந்து மிக்க பிடிவாதம் கொண்டு
முயலுக்குக் காலெண்ணின் மூன்று.
3.       கவிஞர் பே.வள்ளிமுத்து
முயலுக்குக் கால்நான்கு முன்னோஒர் சொன்னார்
முயலுக்குக் காலெண்ணின் மூன்றென்றே போட்டி
முயலுக்குக் காலில்லை முற்றாய்ந்து சொன்னேன்
முயலென்னும் சொல்லில்  முயல்..!
4.       கவிஞர் சுந்தர ராசன்
முயலுக்குக் காலெண்ணின் மூன்று! நிலம்வாழ்
கயலுக்குக் கண்ணெண்ணின் ஒன்று! மயலாழ்த்தும்
மான்விழியாள் இல்லாள் மணிவாக்கை ஏற்பவர்க்கே
தேன்வாழ்க்கை இல்லையெனின் தீ!
5.       கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணியன்
சேரா ரெவருடனும் தேர்ந்தார் சொலக்கேளார்
பாரா ரெதையும் பகுத்தறிந்தே - ஓரார்
முயலுக்குக் காலெண்ணின் மூன்றெனும் மூடர்
செயலிலு முண்டோ சிறப்பு
6.       கவிஞர் செந்தில் பாபு  
சொல்புத்திக் கேளார் சுயமதியு மில்லார்
வல்லாரைப் போற்றாது மாய்வாரே - புல்லர்
வயமிழந்து பொய்யெழுதி வண்டமிழை மாய்ப்பார்
முயலுக்குக் காலெண்ணின் மூன்று
7.       கவிஞர் இரா. அழகர் சாமி
காதல் மனையாள்தன் காதருகே சொல்வதெலாம்
தீதாய் இருப்பினும் தேனாகும்! - போதும்
நயமாகப் பேசியே நம்பவும் வைப்பாள்
முயலுக்குக் காலெண்ணில் மூன்று!
8.       கவிஞர் அழகர் சண்முகம்  
முயலுக்குக் காலெண்ணின் மூன்றென்ற மூடர்
கயல்மேயு மென்பாரே காட்டில்-உயர
வியர்வைசிந் தென்றால் விளங்கார் வெயிலின்
துயர்நனைவார் வீணில் துவண்டு
9.       கவிஞர் ஷேக் அப்துல்லாஹ் அ 
மனம்கட்டுப் பட்டு மதியுடமை பெற்றுக்
கணத்திலும் பேணுதலே கல்வி - குணத்தின்
சுயம்மாறாத் தன்னுணர்வுத் தொட்டதையே மீட்டின்
முயலுக்குக் காலெண்ணின் மூன்று !
10.     கவிஞர் செஞ்சோலை
தன்சொல் பெரிதென்பார் தன்முனைப்பில் ஓங்கியே 
இன்சொல் அறியா இயல்புடையார்-வன்சொல் 
வயப்பட்டே தீயென வாய்ச்சொல் உரைக்கும் 
முயலுக்குக் காலெண்ணின் மூன்று. 
11.     கவிஞர் வ.க.கன்னியப்பன்
கற்றோர் நிறைந்ததோர் கல்விச் சபைதனிலே
உற்ற அறிவில்லா உன்மத்தன் - பெற்றிச் 
செயற்பா டறியாச் சிறுவன்றான் சொல்வான்
முயலுக்குக் காலெண்ணின் மூன்று! 
வெண்கலிப்பா
12.     கவிஞர்
புனிதா கணேசு
முயலுக்குக் காலெண்ணின் மூன்றென்பர் மண்ணிற்றம்
முயலாமை யாலழிவர் முற்கோபங் கொண்டுபிறர்
துயர்கொள்ள வேமுனிவர் துட்டரேகாண் புறங்கூறித்
தயவேதுங் கொள்ளாதுந் தான்
முயலாமை யாலழிவர் முற்கோபங் கொண்டுபிறர்
துயர்கொள்ள வேமுனிவர் துட்டரேகாண் புறங்கூறித்
தயவேதுங் கொள்ளாதுந் தான்
வஞ்சி விருத்தம்
13.     கவிஞர் மன்னை வெங்கடேசன்
வியத்தக்க செய்தாலும் கொளாது
முயலுக்குக் காலெண்ணின் மூன்றென்(று)
அயர்வேதும் இல்லாது சொல்லல் 
நயத்தக்க தன்றென்று சொல்வேன்
No comments:
Post a Comment