'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

பொன் பசுபதியார் நினைவரங்கப்பா


பைந்தமிழ்ச் செம்மல் விவேக்பாரதி

வங்கக் கடல்வளைந்து வாரி அலையடித்துப்
பொங்கும் புதுவையெனும் பொற்புடைய நாட்டினிலே
எட்டு வயதில் எடுத்த சுதந்திரப்போர்
கொட்டுசத்தம் கேட்டுக் குழுமிய வீரத்தும்
கனியும் காயும்எனக் கலந்திருந்த செந்தமிழில்
கனிதான் வேண்டும் காய்வேண்டா எனக்கருதித் 
தனித்தமிழ் முழக்கம் தளரா வகைசெய்து
இனித்த தமிழ்ப்பாக்கள் இயற்றிய நிறைமைத்தும் 
புதுநூல் பலயாத்துப் பழநூல் அறிந்துய்துப்
பொதுநூல் எனவாய்த்த முகநூல் வழிவந்து      10
முதுமை இளமையென முறைமை வகைமையென
மதுரத் தமிழ்க்கவிகள் வழங்கிய தகைமைத்தும்
ஆசான் வரதராசன் அன்பின் மழைநனைந்து
பேசா நிறைவுப் பெருமூச்சுக் காலத்தும்
சோலைப் பாவலர்க்குச் சொல்லிடுங்கள் என்றுரைத்த
சாலப் பரந்த மகிழ்வான நெஞ்சத்தும்
எம்நினைவை அகலாத எங்கள்பொன் பசுபதியார்
தம்நினைவாய் இவ்வரங்கம் தம்கடனாய் நாட்டுகிறோம்
செம்மைத் தமிழ்வாழ்க சேர்சுற்றம் நாம்வாழ்க
எம்மான் அருள்மடியில் என்றும் அவர்வாழ்க        20

No comments:

Post a Comment