'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

வாழ்க்கை


பைந்தமிழ்ப் பாமணி இரா. அழகர்சாமி

எத்தனைக் காலம் இத்தரை வாழ்வு
    எதுவும் தெரியவில்லை
நித்தமும் நடக்கும் நிகழ்வுக ளெதுவும்
    நிம்மதி தருவதில்லை
சொத்துசு கங்கள் சூழ்நிறை சுற்றம்
    சுகப்பட வைக்கவில்லை
பித்தனைப் போலே பிதற்றிடத் தானோ
    பிறப்பெனும் மாயங்கள்!

வானம் பூமி வளர்கதிர் மதியும்
    வந்தெனை ஈர்க்கவில்லை
கானம் கவிதை கலைகள் எதுவும்
    கைவச மாகவில்லை
நானும் எல்லாம் நடப்பது போலே
    நடித்திட முனைகின்றேன்
ஏனோ எதுவும் என்வச மில்லை
    இறைவா அருள்வாயே!

என்னைப் படைத்தே இப்பெரு முலகில்
    இயங்கிட வைத்தவனே
எண்ணம் போலே இன்னும் வாழ
    இயலா திருக்கின்றேன்
சின்னச் சின்னக் கனவினைக் கூடச்
    செதுக்கவோர் திறனில்லை
வண்ணம் குழைத்தே வாழ்வினை அமைக்க
    வழியார் சொல்வாரோ!

தொடுவா னம்போல் தொடரும் வாழ்வைத்
    துரத்தித் தவிக்கின்றேன்
மடுவாய் இன்பம் மலையாய்த் துன்பம்
    மனத்தில் சுமக்கின்றேன்
வடுவாய் நெஞ்சில் வாழ்ந்திடும் துயரம்
    வடியவும் வழியில்லை
விடுவாய் இறைவா வாழ்ந்தது போதும்
    விளங்கா உலகத்தே!

No comments:

Post a Comment